Monday, December 5, 2022

TNPSC சிறைக் காவலர் கணினி வழி தேர்வு : தேர்வு முறை மற்றும் கவனம் செலுத்த வேண்டிய பாடங்கள் என்ன?

tnpsc jailor exams syllabus and marks cut off

TNPSC Jailor exams syllabus : சிறைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு வரும் 26.12.2022 ஆம் நாள் 24 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

சிறைக் காவலர் 8 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு வரும் 26.12.2022 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் 24 மையங்களில் கணினி வழியில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கான அறிவிப்பு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2022 ஆம் நாள் வெளியானது. ரூ. 1,35,100 வரை சம்பளம் கொண்ட இந்த பணிக்கு ஆன்லைனில் 13.10.2022 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியான சிறைக் காவலர் பணிக்குத் தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக /வாய்மொழி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆண்கள் பிரிவில் 6 பணியிடங்களும் பெண்கள் பிரிவில் 2 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டது. 

இந்த மாதம் 22 ஆம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட தற்போது 26 ஆம் தேதிக்குத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு எளிமையான முறையில் தயார் ஆவது எப்படி வினா அமைக்கப்படும் முறை என்ன என்பதை இதில் காண்போம்.

கணினி வழி தேர்வு முறை:


இப்பணிகளுக்குக் கணினி வழி மூலம் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வு என்பது விடைத்தாள் மூலம் தேர்வு எழுவது போன்றது தான். காகிதம் போன்று இல்லாமல் கணினித் திரை மூலம் எழுத வேண்டும். வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும். எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும்.

தாள் 1 மற்றும் தாள் 2 என்று நடைபெறும். முதல் தாள் பட்டப்படிப்பு தரத்தில் அமையும். இரண்டாம் தாள் இரண்டு பாகமாக இருக்கும். முதல் பாகம் கட்டாய தமிழ்மொழி தகுதிக்காக இடம்பெற்றிருக்கும். அதனைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் பொது அறிவு வினாக்களுடன் அமைந்திருக்கும். முதல் தாள் காலை, இரண்டாம் தாள் மாலை என்று இடைவிடாமல் தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கான பாடத்திட்டம் :


இரண்டு தாள் தேர்வுக்கு தலா 3 மணி நேரம் வழங்கப்படும். காலை முதல் தாள் 9.30 மணிக்குத் தொடங்கும். இந்த தாள் பட்டப்படிப்பு தரத்தில் அமைந்திருக்கும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

முதல் தாள் :


இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றிப் படிக்க வேண்டும். சட்டம் உரிவான விதம், சட்டத்தில் இடம்பெற்று உள்ள முக்கிய அம்சங்கள், முக்கிய தலைவர்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளில் நிர்வாகத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்படும். 

அதில் தமிழ்நாட்டை முதன்மைப் படுத்திப் படித்தல் நல்லது. மேலும் இந்தியக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளப்படும் சமுக - பொருளாதார பிரச்சனைகள் பற்றித் தெரிவு தேவை. தொடர்ந்து, இந்தியா மற்றும் மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

இவை முதல் தாளுக்கு போதுமானவையாகும். 300 மதிப்பெண்களுக்குத் தாள் வினாக்கள் அமைந்து இருக்கும்.

இரண்டாம் தாள் :


இரண்டாம் தாள் இரண்டு பாகங்களாக இருக்கும். முதல் பாகத்தில் கட்டாய தமிழ்மொழி தகுதி இடம்பெறும். அது 10 ஆம் வகுப்பு தரத்தில் தான் அமையும். 100 வினாக்கள் கேட்கப்படும். தமிழ்மொழி தகுதித் தேர்வு அல்லாமல் சிலர் தவிர்க்கும் நிலையில் அவர்களுக்கு பொது ஆங்கிலம் தேர்வு நடைபெறும். தமிழ்மொழி தேர்வு கொள்குறி வினாவாகத்தான் அமையும். எனவே கவனத்துடன் எழுதினால் தேர்ச்சி பெறுவது எளிதே.

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டம்: (முதல் பாகம்)

இந்த பாகத்தில் இலக்கணம் முதன்மையான ஒன்றாக உள்ளது. எனவே புகழ் பெற்ற தமிழ் நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். பிரித்தெழுதுக மற்றும் எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல், பிழைதிருத்தம், ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல், ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல், ஓரெழுத்து ஒரு மொழி உரியப் பொருளைக் கண்டறிதல், வேறுசொல்லைத் தேர்வு செய்தல் மற்றும் வேறுசொல்லைத் தேர்வு செய்தல் போன்ற எளிமையான வினாக்கள் தொடக்கத்தில் இடம்பெறும். 

தொடர்ந்து, அகர வரிசை,சொற்றொடர் ஆக்குதல்,பெயர்ச்சொல்,வினைச்சொல், இலக்கணக் குறிப்பு, தன்வினை,பிறவினை, செய்வினை, உவமை, எதுகை, மோனை, இயைபு போன்ற இலக்கண வினாக்கள் இடம்பெறும். மேலும் விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல், வாக்கியம் கண்டறிந்தால் மற்றும் பழமொழிகளும் இடம்பெறும்.

தொடர்ந்து, பகுதி- ஆ பிரிவில் திருக்குறள், அறநூல்கள், காப்பியங்கள், எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்,புராணங்கள்,சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புறப்பாட்டு, சமய முன்னோடிகள் போன்றவற்றில் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு ஏற்ற அளவு கற்றால் நல்லது.

மேலும் தொடர்ந்து பகுதி- இ பிரிவில் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த் தொண்டு பற்றிய வினாக்கள் இடம்பெறும். எனவே குறிப்பாகப் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் ஆகியவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் மரபுக் கவிதை காலம் கவிஞர்கள், புதுக்கவிதை கவிஞர்கள் பற்றிப் படியுங்கள்.

தமிழுக்கு அறிஞர்கள் ஆற்றிய தொண்டு, உரைநடை தமிழ், தமிழின் தொன்மை,கலைகள், பெண்கள் சிறப்பு,வணிகம்,உணவு முறை, சமய அறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தவும்.

இரண்டாம் பாகம்:


இரண்டாம் தாளில் இரண்டாம் பாகத்தில் பொது அறிவு வினாக்கள் இடம்பெறும். மொத்தம் 100 வினாக்களில் 75 வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலும் 25 வினாக்கள் 10 ஆம் வகுப்பு தரத்திலும் இடம்பெறும்.
சிறைக் காவலர் பணிக்கான கட்ஆஃப் :

இரண்டு தாள் தலா 300 மதிப்பெண்கள் விதம் நடைபெறும். இரண்டாம் தாள் பகுதி - அ மற்றும் பகுதி - ஆ பிரிவு தலா 150 மதிப்பெண்கள் விதம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வுக்கு 80 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 680 மதிப்பெண்கள்.

இந்த தேர்வில் தகுதியாக SC, SC(A), ST, MBC/ DC, BC(OBCM) & BCM பிரிவினருக்கு 204 மதிப்பெண்கள் தகுதி பெறும் குறைந்தபட்ச மதிப்பெண்களாக உள்ளது. அதே போல், இதர பிரிவினருக்கு 272 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக வைக்கப்பட்டுள்ளது. இவை இறுதி முடிவு பட்டியலில் வரும் மதிப்பெண்களில் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வில் தகுதி அடைந்தவர்களில் ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு படி வேலை நியமனம் வழங்கப்படும்.

No comments:

Post a Comment