Wednesday, February 1, 2017

ஆகுபெயர் | தமிழ் இலக்கணம்

இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது.

இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது. இந்த இரு தொடர்களையும் படித்துப் பாருங்கள்.

முதல் தொடர் ‘இந்தியா’, மட்டைப்பந்து வீரர்களைக் குறிக்கிறது. இரண்டாம் தொடர் இந்தியா’, இடத்தைக் குறிக்கிறது.

ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு ஆகுபெயர் என்பது பெயர்.

ஆகுபெயர் பதினாறு வகைபெறும். அவையாவன:



  1. பொருளாகு பெயர்
  2. இடவாகு பெயர்
  3. காலவாகு பெயர்
  4. சினையாகு பெயர்
  5. பண்பாகு பெயர்
  6. தொழிலாகு பெயர்
  7. எண்ணல் அளவையாகு பெயர்
  8. எடுத்தல் அளவையாகு பெயர்
  9. முகத்தல் அளவையாகு பெயர்
  10. நீட்டல் அளவையாகு பெயர்
  11. சொல்லாகு பெயர்
  12. தானியாகு பெயர்
  13. கருவியாகு பெயர்
  14. காரியவாகு பெயர்
  15. கருத்தாவாகு பெயர்
  16. உவமையாகு பெயர்


1.பொருளாகு பெயர்

முதற்பொருளின் பெயர் அதன் சினைப் பொருளுக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும். இது முதலாகு பெயர் என்றும் வழங்கப்பெறும்.

(எ.கா) முல்லை மணம் வீசியது.

இதில் முல்லை என்பது முல்லைக் கொடியின் பெயர். இங்கே மணம் வீசியது என்னும் குறிப்பால் இது சினைப் பொருளாகிய முல்லைப் பூவுக்கு ஆகி வந்துள்ளது.


2.இடவாகு பெயர்

ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.

(எ.கா)  ஊர் சிரித்தது.

இதில் ஊர் என்னும் இடப்பெயர் சிரித்தது என்னும் குறிப்பால் ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்துள்ளது.

3.காலவாகு பெயர்

ஒரு காலத்தின் பெயர் அந்தக் காலத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.

(எ.கா)   கார் அறுவடை ஆயிற்று.

இதில் கார் என்பது காலப்பெயர். இங்கே அறுவடை ஆயிற்று என்னும் குறிப்பால் இது கார்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்துள்ளது.


4.சினையாகு பெயர்

ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

(எ.கா) தலைக்குப் பத்து ரூபாய் கொடு.

இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது.

முதலாகு பெயர் -முதற்பெயர் சினைப் பொருளுக்கு ஆகி வரும்.

சினையாகு பெயர் -சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வரும்.


5.பண்பாகு பெயர்

ஒரு பண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது குணவாகு பெயர் என்றும் வழங்கப்பெறும்.

(எ.கா)  இனிப்பு உண்டான்.

இதில் இனிப்பு என்னும் சுவைப் பண்பின் பெயர் அச்சுவை கொண்ட பொருளுக்கு ஆகி வந்துள்ளது.


6.தொழிலாகு பெயர்

ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.

(எ.கா)  சுண்டல் உண்டான்.

இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.

7.எண்ணல் அளவை ஆகுபெயர்

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

     பொதுவாக நான்கு, இரண்டு என்பன எண்ணிக்கையைக் குறிப்பிடுவன. ஆனால் அவை இங்கு நாலடியார், திருக்குறள் என்னும் இரண்டனுக்கும் ஆகிவந்தன.

8.எடுத்தல் அளவை ஆகுபெயர்

ஐந்து கிலோ கொடு

     ‘கிலோ’ என்பது நிறுத்துக் கொடுக்கும் எடுத்தல் அளவினைக் குறிப்பது. ஆனால், இங்கு அது குறிப்பிட்ட எடையுள்ள ஒரு பொருளுக்கு குறித்தது.

9. முகத்தல் அளவை ஆகுபெயர்

இரண்டு படி கொடு

     ‘படி’ என்பது முகந்து அளக்கும் ஓர் தமிழ் அளவுக் கருவியின் பெயர் ஆகும்.
ஆனால், அது இங்கு அவ்வாறு முகந்து அளக்கும் பால் அல்லது எண்ணெய்க்கு ஆகி வந்தது. (‘படி’ = ‘இலிட்டர்’ போன்றது)

10.நீட்டல் அளவை ஆகுபெயர்

எட்டு முழம் கொடு

     முழம் என்பது ஒரு பொருளை நீட்டி அளக்கும் தமிழ் அளவின் பெயர். ஆனால் அது இங்கு அந்த அளவுடைய துணிக்கு அல்லது பூவிற்கு ஆகி வந்தது. (முழம் = ‘மீட்டர்’ போன்றது)

11.சொல் ஆகுபெயர்

நண்பன் என் சொல்லைக் கேட்பான்

     இங்கு இடம்பெற்ற சொல் என்பது எழுத்துகளால் ஆன சொல்லைக் குறிப்பது.
ஆனால் ‘நண்பன் என் சொல்லைக் கேட்பான்’ என்னுமிடத்தில் சொல் என்பது அறிவுரையைக் குறித்து நிற்கிறது.

12.தானி ஆகுபெயர்

விளக்கு முறிந்தது

     இவ்எடுத்துக்காட்டில் முறிந்துபோனது ஒளிவீசும் விளக்கின் ஒரு பகுதியாகிய தண்டு ஆகும்.

     விளக்கு என்பது இங்குத் தானி எனப்படும். அந்தத் தானி, அதற்கு உட்பட்ட ஓர் இடத்திற்கு ஆகி வந்தது.

13.கருவி ஆகுபெயர்

குழல் கேட்டு மகிழ்ந்தேன்

     குழல் என்பது இசையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும்.

     இங்குக் குழல் கேட்டு மகிழ்ந்தேன் என்றால், அக்கருவியின் வழியாக வெளியான இசையைக் கேட்டு மகிழ்ந்தேன் என்று பொருள்.

14.காரியவாகு பெயர்

அலங்காரம் படித்தேன்

     அலங்காரம் என்பது ஒரு காரியத்தின் பெயர். (காரியம் - செயல்)

இங்கு அலங்காரம் என்பது அக்காரியத்தைக் குறிக்காமல் ஒரு நூலைக் குறித்தது.

15.கருத்தா ஆகுபெயர்

கம்பனைக் கற்றேன்

     இவ்எடுத்துக்காட்டில் கம்பன் என்பது கருத்தா (ஆள்) ஆகும்.

     அந்த ஆளையே கற்றல் இயலாது . மாறாக அவர் படைத்த நூலாகிய
கம்பராமாயணத்தைக் கற்றேன் என்பதே பொருளாகும். கருத்தாவின் பெயர் அவர்
செய்த நூலுக்கு ஆகிவிடுகிறது.

16.உவமை ஆகுபெயர்

மயில் ஆடினாள்

     மயில் ஆடியது என்று இருந்தால் அது பறவையைக் குறிக்கும்.

     ஆனால், மயில் ஆடினாள் என்று வந்திருப்பதால் மயில் என்பது ஒரு
பெண்ணுக்கு உவமையாக அமைவதை உணரவேண்டும்.


இவ்வாறு ஓர் உவமை பொருளுக்கு (பெண்ணுக்கு) ஆகி வருவது உவமை ஆகுபெயர்.

2 comments: