Monday, August 26, 2013

"கவியரசு" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்

டி.என்.பி.எஸ்.சி யின் மாற்றப்பட்ட தமிழ்பாடத் திட்டத்திற்கு ஏற்ப, நவீன கவிஞர்களையும், அவர்தம் வாழ்க்கை குறிப்புகளையும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நடந்து முடிந்த போட்டித்தேர்வில், திரு.வி.க வைப்பற்றிய இரண்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தது. அதுபோன்ற கேள்விகள் இனி வரும் டி.என்.பி.எஸ்.சி 4 குரூப் மற்றும்  டி.என்.பி.எஸ்.சி 4 குரூப்-வீ.ஏ.ஓ தேர்வுகளில் கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

ஒவ்வொரு கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளைத் தெரிந்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் இப்பதிவில் கவிஞர் முடியரசன் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 

கவிஞர் முடியரசன் அவர்களின் இயற்பெயர்: துரைராசு
பிறந்த ஆண்டு: 1920 அக்டோபர் 7
சொந்த ஊர்: பெரிய குளம், மதுரை மாவட்டம்
பெற்றோர்கள்: சுப்பராயலு, சீதா லட்சுமி அம்மையார்.

கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியர்களுடன் நெருங்கி பழகியவர். பாரதிதாசனுடன் கொண்ட நட்பால் முற்போக்கு எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, அதை தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்.

அதை வலியுறுத்தும் விதமாக தன்னுடைய மறைவின்பொழுது சடங்குகள், சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று கூறி, அதன்படியே நிறைவேற செய்தவர். காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்த இவர் தன்னுடைய இயற்பெயரான துரைராசு என்பதை மாற்றி முடியரசன் என்று வைத்துக்கொண்டார்.

கவியரசு முடியரசன் அவர்கள் எழுதிய நூல்கள்: 


1. பூங்கொடி
2. காவியப்பாவை
3. வீரகாவியம் (காப்பிய நூல்)
4. முடியரசன் கவிதைகள் (கவிதை நூல்)

இதில் பூங்கொடி என்ற காவிய நூல் 1966 -ல் தமிழக அரசின் பரிசைப்பெற்று புகழடைந்தது.

பட்டங்கள்: 

திரு குன்றக்குடி அடிகளார் பறம்பமலையில் நடந்த விழாவில் இவருக்கு "கவியரசு" என்ற பட்டத்தை வழங்கினார். 
பேறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு "திராவிட நாட்டின் வானம்பாடி" என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார். 

முடியரசன் எழுதி மற்ற நூல்களும் - ஆண்டுகளும்: 


அன்புள்ள பாண்டியனுக்கு – 1968
பாடுங்குயில் - 1986
நெஞ்சுபொறுக்கவில்லையே – 1985
மனிதனைத் தேடுகிறேன் - 1986
தமிழ் முழக்கம் - 1999
நெஞ்சிற் பூத்தவை – 1999
ஞாயிறும் திங்களும் - 1999
வள்ளுவர் கோட்டம் - 1999
புதியதொரு விதி செய்வோம் - 1999
தாய்மொழி காப்போம் - 2001
மனிதரைக் கண்டுகொண்டேன் - 2005
எக்கோவின் காதல்
எப்படி வளரும் தமிழ் - 2001

காவியங்கள்:


பூங்கொடி - 1964
கவியரங்கில் முடியரசன் - 1964
வீரகாவியம் - 1966
ஊன்றுகோல் - 1983

கவிதைத் தொகுப்புகள்:


காவியப்பாவை – 1960
முடியரசன் கவிதைகள் - 1954
கவியரங்கில் முடியரசன் - 1960
பாடுங்குயில் - 1986

பட்டமும், விருதுகளும்: 


அழகின் சிரிப்பு என்ற கவிதை – முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது - 1950
தமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம் - 1966
மாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள் - 1954
கவியரசு என்ற பட்டம் - பறம்பு மலை விழாவில் மாநில அரசு வழங்கியது.
'திராவிட நாட்டின் வானம்பாடி' என்ற பட்டம் - அறிஞர் அண்ணா வழங்கினார் - 1957
'கவியரசு' என்ற பட்டம் - குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966
கலைஞர் விருது – 1988
பாவேந்தர் விருது – 1987
கலைமாமணி விருது – 1998
அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு – 1993

கவிஞர் முடியரசன் பற்றிய மேலதிக தகவல்கள்: 


இவருடைய பெற்றோர் பெயர் சுப்பராயலு – சீதாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. 

இவருடைய பல கவிதைகள் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன. திரைத்துறையிலும் ஈடுபட்டு கண்ணாடிமாளிகை என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல் எழுதியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் ஓராண்டு காலம் பணியாற்றினார். 

'வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்
தீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த
முடியறச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
முடியரசன் செய்யுள் முறை'

என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவிஞர் முடியரசன். தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுக் கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாயக் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன். 

அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க்கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். இவருடைய கவிதைகள் தமிழின முன்னேற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது. 

Tags: முடியரசன்,கவியரசு,கவிஞர்கள்,வாழ்க்கை குறிப்புகள், kaviyarasu mudiyarasan valkkai kuripugal, kavingar, mudiyarasan

1 comment: