Wednesday, December 23, 2015

TNPSC TAMIL | பிள்ளைத்தமிழ் இலக்கணம் | குழந்தை பருவங்கள்

புலவர்கள் தாம் விரும்பும் தெய்வத்தையோ, அரசனையோ, தலைவனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் எனப்படும்.

இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும்.

இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். வெண்பாப் பாட்டியல் (செய்யுளியல் 7ஆவது பாடலின்) மூலம் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களை உடையது பிள்ளைத் தமிழ் என்பதை அறிய முடிகிறது.

இதில் முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாகும். கடைசி மூன்று பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன. இம்மூன்று பருவங்களுக்குப் பதிலாக, கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைப் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சேர்த்துக் கூறுவது மரபு.

 காப்புப் பருவம்

பாட்டுடைத் தலைவனை    அல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனை    வேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.

தாலப் பருவம்

 தால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.

 செங்கீரைப் பருவம்

ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இது   குழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.

சப்பாணி

குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.

முத்தம்

இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.

வருகை அல்லது வாரானை

குழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.

அம்புலி

15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில்    நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.

சிற்றில்

17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

சிறுபறை

19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.

சிறுதேர்

21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.

நீராடல்

குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.

அம்மானை - கழங்கு

கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.

ஊசல்

ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.

No comments:

Post a Comment