TNPSC Preparation: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அதிகாரி, ஐபிபிஎஸ் புரொபேஷனரி அதிகாரி, எஸ்பிஐ இளநிலை அசோசியேட் போன்ற பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் சேர முடியாத ஏழை எளிய மாணவர்களை மனதில் வைத்து, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் கீழ்காணும் சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தேர்வை சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பயிலும் வட்டங்கள் (Study Circle):
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Study Circle) செயல்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி, ஐபிபிஎஸ், எஸ்எஸ்சி போன்ற பல்வேறு தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் இளைஞர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்கு தன்னார்வ பயிலும் வட்டங்கள் உதவுகின்றன.
இந்த பயிலும் வட்டத்தில், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள், தினசரிகள், அத்தேர்வுகளுக்கான தனிப்பட்ட பாடக்குறிப்புகளோடு முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்கள் தேர்வர்களுக்கு கிடைக்கும். மேலும், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
கடந்தாண்டில், பயிலும் வட்டத்தை பயன்படுத்திய ஆர்வலர்களில் 590 பேர் பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 2022-23 நிதியாண்டிற்கு தமிழ்நாடு அரசு பயிலும் வட்டங்களுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தனியார் பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாத தேர்வர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அந்தந்த, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் தொடர்புக்கு இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும். ஏதேனும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் உடனடியாக கலந்து கொண்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகுவது எப்படி? 10 முக்கிய டிப்ஸ்கள் இங்கே
நூலகத்தை அணுகுங்கள்: பொது நூலக இயக்ககத்தின் கீழ், ஒவ்வெரு மாவட்டத்திலும் மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கென சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம்.
எனவே, மாவட்ட மைய நூலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிறப்பு வகுப்புகள் குறித்து கேட்டறியுங்கள். ஊர்ப்புற நூலகங்களில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், தினசரிகள் வாங்கி வைக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.
உயர்கல்வி நிறுவனங்களை அணுகுங்கள்: அண்ணா பல்கலைக்கழக வளாகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, உயர்கல்வி மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள்.
tamilnaducareerservices போர்ட்டல்: போட்டித் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில், tamilnaducareerservicesஎன்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொடங்கியுள்ளது.
பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஎன்பிஎஸ்சி, ஐபிபிஎஸ், ரயில்வே வாரியம், வாரியம் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவுத் தொகுப்புகள், பாடக் குறிப்புகள், காணொளி காட்சிப் பதிவுகள், ஒலிப்பதவிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
சமீபத்திய தரவுகளின் படி, இந்த இணைய தளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். எனவே, நீங்கள் உடனடியாக இந்த இணையத்தளத்தில் பதிவு செய்து கொண்டு தேர்வுக்கு தயாராகத் தொடங்குங்கள்.
No comments:
Post a Comment