Wednesday, January 6, 2016

10th, +2 ல் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற

நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும். நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால், நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை

முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் (Increase your confidence level). இதற்குத் தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிப் போடுங்கள்.

ஆர்வம்

எந்த ஒன்றில் வெற்றிபெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது ‘இந்தப் பாடம் கடினமான பாடம்’ என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கிறது.

‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை. சில பாடங்கள் ஒருமுறை படித்தால் புரியும். சில பாடங்கள் பலமுறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் பல பேர் நூற்றுக்கு நூறு எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி

மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி. நன்றாகப் படித்தேன், ஆனால் தேர்வு அறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது. பாடத்தில் ஆர்வமின்மையை இது காட்டுகிறது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறந்துபோகிறது. சினிமா பாடல் கேட்கும்போது கவனத்துடன் கேட்கின்றனர். கவனமாகப் பாடல் கேட்கும்போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும்போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, டிவி பார்த்துகொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது, இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதனால் கவனம் சிதறடிக்கப்பட்டு படிப்பது முழுமையாகப் மனத்தில் பதிவதில்லை. அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்பதில்லை.

மறதியைப் போக்க

கவனமாகப் படியுங்கள். படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு கேட்காதீர்கள். டிவி பார்க்காதீர்கள். இரவுப் படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள். அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதிப் பாருங்கள். ஆர்வமாகப் படித்தால் எதுவும் மறக்காது

நாம் நமக்காகப் படிக்கிறோம்

நாம் ஏன், எதற்குப் படிக்கிறோம் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்காகவோ படித்தால், நிச்சயம் மறக்கத்தான் செய்யும். நீங்கள் உங்களுக்காகப் படிக்கிறீர்கள். நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாகப்போகும். இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே, நான் படிப்பது என்னுடைய நலனுக்காகத்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும்.

சினிமா பாட்டு கேட்கும்போது உள்ள கவனம், படிப்பதில் குறைவாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம், படிப்பில் இல்லாமல் போகிறது. நம்முடைய நேரத்தை, நம்மை வளர்த்துக்கொள்ள பயன்படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதாலும், கிரிக்கெட் பார்ப்பதாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர். மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவழியுங்கள் (படியுங்கள்).

கடின உழைப்பு

1. படிப்பதற்காக அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். நமது படிப்பில் இலக்கை நிர்ணயித்து அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், பள்ளிக்கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை... எனவே நான் நன்றாகப் படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களைக் குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்கக் கூடாது, நாம் எந்தப் பள்ளியில் படித்தாலும் கவனமாக கஷ்டப்பட்டு படித்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும்.


2. எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்துக்குச் செல்ல வேண்டும்.


3. படிப்பதை தள்ளிப்போடாதீர்கள். படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளிப் போடாதீர்கள். இப்படி தள்ளிப் போட்டுக்கொண்டே போனால், தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும். நம் வாழ்க்கையும் வீணாகிவிடும்.


4. குறிப்பிட்ட பாடத்துக்கு அதிகக் கவனம் செலுத்திப் படிப்பது தேவையான ஒன்று. ப்ளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேருவதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதேபோல், மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே, குறிபிட்ட பாடங்களில் அதிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

தேர்வு எழுதும் முன்...

தேர்வுக்கு முன்னதாக நாம் பாடங்களைப் படிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளைப் பார்ப்போம்:

1. படிக்கும் முறை

பொதுவாக நாம் தேர்வுக்காகப் படிக்கும்போது வெறுமனே புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்குப் போகாமல், அதுவரை படித்ததைப் பார்க்காமல் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

2. திட்டமிடுதல்

எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்குப் படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். (Time table போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்புக்காகச் செலவு செய்ய வேண்டும். இதில் 10 மணி நேரத்தை படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தை படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்தவும் (Revise செய்ய) பயன்படுத்த வேண்டும். அதேபோல், நாம் படிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த பயன்படுத்த வேண்டும்.

3. சுய பரிசோதனை (Check list)

ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்கப்போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதை தினமும் செய்தால்தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்கவேண்டி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். திட்டமிடும்போது வாரத்தில் 6 நாள்களுக்குத்தான் நாம் படிப்பதற்குத் திட்டமிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிக்க ஒதுக்க வேண்டும். தேர்வுக்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும்போதே படிப்பதை நிறுத்திக்கொள்ள வேன்டும். புதிதாக எதையும் படிக்காமல் அதுவரை படித்ததை நினைவில் நிறுத்த வேண்டும். எனவே, நாம் திட்டமிடும்போது தேர்வுக்கு 2 அல்லது 3 வாரத்துக்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்துவிடும்படியாகத் திட்டமிட வேண்டும்.

4. நம்பிகையுடன் படிக்க வேண்டும்

படிக்கும்போது, இந்தப் பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். பாடம் கடினமாக உள்ளதே, எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக்கூடாது. Negative thoughts இருக்கக்கூடாது. படிக்கும்போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் நாம் பாடத்தை Revise பண்ணுவதற்கு எளிதாக இருக்கும். படிக்கும்போது பாட்டு கேட்பது, டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்திப் படிக்க வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாளே பேனா, பென்சில், ரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதச் செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்ல வேண்டும்.

தேர்வு எழுதும் போது...

தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றவுடன் நேராக தேர்வறைக்குச் சென்றுவிடவும். நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது நம்மை பலவீனப்படுத்தக்கூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும். நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால், தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டை விட்டுவிடுவோம். எனவே நமது நம்பிக்கையைப் பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

1. தேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாகப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் மேஜையின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்துவிடுங்கள். அழிக்க முடியவில்லை எனில் தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

2. கேள்வித்தாள் வந்ததும் கவனமாகப் படிக்கவும். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து கேள்விதாளைப் படிக்கவும். நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்வித்தாளை கவனமாகப் படிக்கவும்.

3. நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள். பிறகு ஓரளவுக்குத் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள். தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம். எந்தக் கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.

4. பக்கம் பக்கமாகப் பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Point by Points). முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள்.\

5. சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்துக்குள் எழுதுங்கள். தேவைப்படும்போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.

6. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதிப் பழகிய பேனாவை பயன்படுத்துங்கள்.

7. பொதுவாக, முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தைப் பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.

8. ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம்.

9. விடைத்தாளை அதிகாரியிடம் சரப்பிக்கும் முன், கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

10. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால், விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.

தேர்வு எழுதி முடித்த பிறகு...

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டுக்குச் செல்லவும். நண்பர்களுடன் வினா விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டி, நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள். அது நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும் அத்துடன், அடுத்த தேர்வுக்கு நாம் ஆயத்தமாவதை பாதிக்கும்.

பிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை

மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளைத் தங்களுடைய பிள்ளைகள் பின்பற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், மாணவர்கள் வயது குறைந்தவர்கள். பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே, மேற்சொன்ன வழிமுறைகளைப் பெற்றோர்கள் படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் சரியாகப் படிக்கிறார்களா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதிக் காண்பிக்கச் சொல்ல வேண்டும். படிப்பை தவிர மற்ற விஷயங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

1. டிவி பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள். கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.

2. பிள்ளைகளிடம் இருந்து செல்போனை, தேர்வு முடியும் வரை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். படிப்பதற்குத் தவிர, வேறு எதற்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த விட வேண்டாம். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமயாகத் தடை போடுங்கள்.

4. மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும். பிள்ளைகளைத் திட்டாதீர்கள். அன்பாகச் சொல்லி, அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டவும்.

5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதைக் கண்கானியுங்கள். அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாகச் சொல்லுங்கள். திட்டமிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.

6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.

7. உடன் படிக்கும் மாணவ, மாணவியருடனோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பிற மாணவர்களுடனோ உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

8. உங்கள் வீட்டு பொருளாதாரச் சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுக் கவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.


தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வெற்றிபெற வாழ்த்துகள்.

No comments:

Post a Comment